Thursday, April 15, 2010

தினமணி - 8 ஏப்ரல் 2010


*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'* 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம்
கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ​நடத்தப்படுகிறது.
கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக்
குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ'
பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இணைய மாநாட்டையொட்டி பள்ளி,​​ கல்லூரி மாணவர்களுக்கு இணைய ​போட்டிகள் நடத்தி
முடிக்கப்பட்டுள்ளன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம்
மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்கம்,​​ பத்திரிகையாளர்களுக்கான அரங்கம்,​​ பொது
தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள்
​நிறுவப்படுகின்றன.

மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை
வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும்,​​ இணைய
மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு,​​ கொடிசியா தொழிற்காட்சி ​வளாகத்தை
வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.

இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல்,
தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இணையதள இணைப்பு,​​ அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

நன்றி:- தினமணி